Friday, May 11, 2012

அழியாத நினைவலைகள்

ஒரு மனிதன் தனது இருபதுகளில் ஒரு இடது சாரியாகவும் தனது அறுபதுகளில் ஆன்மீகவாதியாகவும் இல்லாமல் இருக்க முடியாது என்பார்கள். அதை உடைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

 இந்திய மண்ணில் ஒரு மூன்று சதம் பேர் சனாதனவாதிகளாக (மனு(அ)தர்மவாதிகள்)இருந்து கொண்டு எப்படி இந்த தேசத்தையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அது போல உலகம் முழுமைக்கும் நாத்தீகம் கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் அடக்கியாள முயற்சிக்காதவர்கள். மனித நேயம் உள்ளவர்கள்.


அந்த வகையில் பொதிகை டி வியில் உ வாசுகியும் ஞானியும் தொகுத்த பெரியார் தொடரில் வருவாரே மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் அவர் மிகவும் என்னைக்கவர்ந்தவர். அவர் கடவுள் மறுப்பாளராக தனது இளம் வயதில் பரிணமிக்கிறார். வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இறுதிப்படுக்கையில் கிடக்க நேரிடுகிறது, அடுத்து மரணம்தான்..

 என் வி குறிப்பிட்டது போல வயது ஆகிவிடுகிறது நமக்கு. உடம்பின் ஒவ்வொரு பகுதியும் தனது செயல்பாட்டைக்குறைத்துக்கொள்கிறது. அனைத்து உறுப்புகளும் தனது செயல்பாட்டை முற்றிலுமாகக்குறைத்துக்கொண்டு விட்டால் அல்லது செயல்பாட்டை  நிறுத்திக்கொண்டால்  மரணம்  நம்மைத்தழுவிக்கொள்ளும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் தனது மரணப்படுக்கையில் இருப்பார். அப்போது அவரது சிந்தனை இதுவாக இருந்தது. அதை இப்படி வெளிப்படுத்துவார். வழக்கமான  நடை முறையில் அறுபதுகளில் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு எனது நாத்தீகக்கொள்கையைக்கை விட்டதாக யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறுதி மூச்சு வரை நான் நாத்தீகவாதியாகவே இருக்கிறேன் நாத்தீக வாதியாகவே மரணம் அடைவேன் என்பதை பத்திரிகையாளர்களை அழைத்து குறிப்பிடுவார்

இருபதுகளில் மார்க்சீய சிந்தாந்தங்ககளின் பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். தன்னையும் அப்படியான ஆளாக திரையில் திரு வைரமுத்து எரிமலை எப்படிப்பொறுக்கும் (ஏ வி எம்மின் சிவப்பு மல்லி 1980) போன்ற பாடல்களால் கவர்ந்திருந்தார். வருடாவருடம் நடக்கும் காரைக்குடி கம்பன் விழா ( 1983)வில் சிறப்பு விருந்தினராக திரு வைரமுத்து வந்திருந்தார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


அதன்பிறகு காரைக்குடி செட்டி நாடு மகளிர் கல்லூரியில் 89 ஆம் ஆண்டு கல்லூரி துவங்கிய சமயம் கல்லூரி நிர்வாகத்திற்கும் பேராசிரியப்பெருமக்களுக்கும் பிரச்சனை.  நிர்வாகத்தை எதிர்த்து பேராசிரியர்கள் வீரச்சமர் சமர் புரிந்து கொண்டிருந்த நேரம் சகோதர தொழிற்சங்கங்கள் ஆதரவுடன். நாங்கள் தொலை பேசி ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தோம்.

 பேரா. மாடசாமி, பேரா. ராஜு, பேரா பார்த்தசாரதி, பேரா. விஜயகுமார்  பேரா மனோகரன் காரைக்குடி பேரா தேனப்பன், பேரா ஆவுடையம்மாள்,  நாகலிங்கம் குமரவேல் (தேவகோட்டை)போன்ற மூட்டா சங்கத்தலைவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு சாலையோர வகுப்புகள் நடத்தி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்துமாணவிகளுக்கு கல்வி கெடாவண்ணம் போதித்துக்கொண்டிருந்தனர். பட்டிமன்றப்பேச்சாளர் சரஸ்வதி ராம நாதன் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

அந்த சாலையோர வகுப்பறைகள் போராட்டம் முடியும் தருவாயில் அன்றைய திருவெரும்பூர் எம் எல் ஏ திருமதி பாப்பா உமா நாத், மற்றும் திரு வைரமுத்து ( பேரா மாடசாமியின் வகுப்பறைத்தோழன்) இருவரையும் அழைத்து ஒரு சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மாணவர்கள், மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன். அப்போதைய காரைக்குடி எம் எல் ஏ அவர்களின் புதிய ஹோட்டல் மலரில் வைரமுத்து தங்கியிருந்தார். எனது குழந்தை  திலிப் சுகதேவுக்கு அப்போது ஒரு வயது .நான் எனது இணை மற்றும் இரு நண்பர்களுடன் அந்தப்புகைப்படம்.





தோழர் பாப்பா உமா நாத்கையில் திலீப் சுகதேவ்.
நிற்பவரில் வலது கோடி எனது துணைவியார்

மற்றோர் புகைப்படத்தில் தோழர் ஆசிரியர்
என் ராமச்சந்திரன் கையில் திலிப் சுகதேவ்.




இன்னும் சில   நிழற்பட நினைவுகள் அடுத்தாக....

Thursday, May 3, 2012

அவர்ணக்கவிதைகள் சில...

படித்ததில் பிடித்த சில அவர்ணக்கவிதைகள்
கவிஞர்களின் பெயர்களுடன்:


I




சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்

காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு?
என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்

"உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
 உங்க சாதிக்குத்தானே" என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ

ஒன்று செய்!
உன்னைறியாத ஊரில் போய்
உன்னைப்பறையனென்று சொல்
அப்போது புரியும் என் வலி

                                                             - இராசை கண்மணி ராசா



II






என்னைக்கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித்தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்கள் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப்பக்கதில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலேயே
சூரிய சந்திரச்சுழற்சிகள் இன்னும் எது வரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச்சொல்லியல்ல
எடுத்துக்கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்
கொண்டிருக்கிறோம்

அதுவரை அனுபவியுங்கள்
ஆசீர்வதிக்கிறோம்

                                                                     -ஆதவன் தீட்சண்யா




III





விளம்பரப்படுத்துகின்றன
சாதிகளால் ஆன தேசம்
இதுவென்று
சமத்துவபுரம்
பொதுமயானம் என்று
பெயர்களைத்
தாங்கி நிற்கும்
பலகைகள்

                                                                  -யாழி




IV


சம பலத்துடன்
இருந்தபோதும்
இரண்டாம் நகர்த்தலுக்கே
தள்ளி வைக்கப்படுகிறது
சதுரங்கத்திலும்
கருப்புக்காய்கள்

                                                                                                   -யாழி



V





ஆசை ஆசையாய்
காதைத்தொட்டுக்காட்டி
பள்ளிக்கூடம் சேர்ந்த அன்று
அகர முதல் எழுத்துக்குப்பின்
அறிந்து கொ\ண்டேன்
என் சாதியை

                                        - பெரியசாமி



VI






எங்கும் இல்லை
என் மூதாதியின் பெயர்
நீ எழுதிய வரலாறு

                                             - மகுடேஸ்வரன்

Monday, January 16, 2012

மாட்டுக்கறியும் மனிதர்களும்

நாடெங்கும்
விலைவாசி உயர்வு
ஒரு டீயின் விலை
அறுபது பைசா என்பது
விலைவாசி உயர்வல்ல

பொது கிளாசில்
டீ கேட்க
தனி கிளாசில்
டீ கொடுக்க

ஒரு டீயின் விலை
ஒன்பது உயிர்கள் என்று
உயர்ந்து கிடக்கிறது
-கவிஞர் கந்தர்வன்
எண்பதுகளின் இறுதியில் எழுதிய கவிதை இது. இன்றைக்கு ஒரு டீயின் விலை ஆறு ரூபாயைத்தாண்டி நிற்கிறது. நிற்க...
ஹிமாச்சலப்பிரதேசத்தில்  ஜஜ்ஜார் நகரில் விஜய தசமியை ஒட்டிய ஒரு தினத்தில் செத்த மாட்டை உரித்த குற்றத்திற்காக ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
ஒருவர் மாட்டுக்கறி சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம் சார்ந்தது. கைபர் போலன் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று வரலாறு சொல்லுகிறது அவர்கள் ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தவர்கள் அதையே உணவாகவும் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகைக்கு முன்பே மூடப்பட்ட சாக்கடை கொண்ட ஹரப்பா மனிதர்கள் நாகரீகத்தில் மேம்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு பொதுப்புத்தியில் உறைத்திடுப்பதைப்போன்று ஆடுகள் மட்டுமே மேன்மை நிறைந்த புலால் உணவு உட்கொண்டு வாழ்ந்திருந்தார்களா என்பது தெரியவில்லை.
கோமேதகயாகம் என்ற பெயரில் மாட்டை சுட்டு சாப்பிட்டு யாகம் (?) செய்து வாழ்ந்திருக்கிறார்கள்
இவர்கள் அளவில்லாமல் மாடுகளைக்கொல்லுவதைப்பார்த்துதான் கொல்லாமை என்னும் ஒப்பரிய தத்துவத்தையே கௌதமபுத்தர் அருளியிருக்கிறார்.
ஆதவன் தீட்சண்யா லண்டன் சென்று திரும்பிய பிறகு ஒரு பதிவில் இருக்கிற கறிகளிலேயே விலை மிகவும் உயர்ந்ததாக இருந்தது மாட்டுக்கறிதான் என்று சொல்லியிருந்தார். எனக்கு மட்டும் சிறு வயதில் நாய்க்கறி சாப்பிடும் பழக்கத்தை (வட கிழக்கு மாகாணங்களில் நாய்க்கறிதான் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம்) ஏற்படுத்தியிருந்தால் அதைத்தான் கடைசி வரை கைக்கொண்டிருப்பேன். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுதானே நடைமுறை.
நக்கீரன் கோபால் மாட்டுக்கறி சாப்பிட்டாரா  இல்லையா என்பதல்ல இன்றைய முக்கியம். மாமி ஒருவர்மாட்டுக்கறி சாப்பிட்டாரா இல்லை சாப்பிட வில்லையா என்பதுதான் கேள்வி.  அவர் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் அதை எழுதுவது எப்படி சரியாகும் என்று மரக்கறி  உணவு உண்பவர்கள் போராடுகிறார்கள்(!)
உலகம் முழுமைக்கும் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள்தான் அதிகம் இந்த உண்மை இன்று நக்கீரன் அலுவலகத்தை உடைப்பவர்களுக்கு தெரியுமோ இல்லையா என்பது நமது கேள்வி. 
மரக்கறி உணவு உண்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று யார் சொன்னது. அப்படியென்றால் திகாரில் ராசாவுடன் ஷர்மா ஏன் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கிறார். கேதன் தேசாய் 3500 கோடி ரூபாயும் 3500 கிலோ தங்கமும் ஏன் சட்டத்தை மீறி சேர்க்கிறார்(அல்லது  ஏன் கொள்ளையடிக்கிறார்?).
மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் எந்த விதத்திலும் யாருக்கு குறைந்தவர்கள் அல்லர். அவர்களும் சக  மனிதர்கள் என்பதை நினைவு கொள்ளுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

Sunday, December 11, 2011

மண நாள் 25ஆவது ஆண்டு




1986 ஆம் ஆண்டு டிசம்பர்த்திங்கள் 10 ஆம் நாள் எனது திருமணம் நடைபெற்றது. விருது நகரில் அருப்புக்கோட்டை சாலையில் இருக்கும் சிமினி நந்தவனத்தில் நடைபெற்றது அதையொட்டி நான் அடித்த அழைப்பிதழ் இது. முகூர்த்த நேரம் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை ஆகவே. திருமண நேரம் காலை 10 மணி அளவில் என்று குறிப்பிட்டு இருந்தேன். காரைக்குடியில் அப்போது வேலை பார்த்து வந்தேன். நான் பிறந்த சாதியில் முதன் முதலாகப்பட்டப்படிப்பு படித்து வந்தவனும் முதன் முதலாக கல்யாண மண்டபம் பிடித்து  மணம் முடித்தவனும் நானே.




ஒரு கூட்டம் போல அமைத்திருந்தேன் அழைப்பிதழை. காரைக்குடியில் அப்போது சீனா தானா என்ற ஒரு எம் எல் ஏ இருந்தார். அவருக்கு சொந்தமான "அரசு அச்சகம்"  வ உ சி சாலையில் இருந்தது. எம் எல் ஏ எல்லாம் எனக்கு அப்போதைக்கு  அறிமுகம் கூட கிடையாது. அங்கிருக்கும் அச்சுக்கோர்க்கும் மற்றும்  பைண்டிங் செய்யும் தொழிலாளர்கள் எல்லாமே பழகி விட்டிருந்தார்கள்.  நான் எழுதிக்கொடுத்தபடி அழைப்பிதழ் அச்சடித்துக்கொடுத்தார்கள். ஆங்கிலத்தில் அச்சேற்றுவது பிடிக்காது என்பதால் தமிழில் அழைப்பிதழ் வடிவமைத்தேன். கூட்டத்திற்கு நிர்ணயம் செய்தவர்கள் எல்லாமே தொழிற்சங்கத்தலைவர்கள் அனுபவஸ்தர்கள். திரு எஸ் ஏ பெருமாள் இன்றைய செம்மலர் ஆசிரியர் அன்றைக்கு த மு எ ச வின் முன்னோடி. அவர்தான் திருமணத்தைப்பற்றிய ஒரு அறிமுகத்துடன் திருமணத்தை நடத்தி வைத்தார். நமது சாதி சனமெல்லாம் மூன்று வேளை சாப்பாடு அதாவது முதல் நாள் இரவு சாப்பாடு விருதுநகர் மாடலில்  மிளகாய்ச்சட்டினி, பால்சாதத்துடன்., மறு நாள் முகூர்த்தமன்று காலை கேசரி, வெண்பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் என. அப்புறம் திருப்பூட்டு முடிந்தபிறகு ஜாம், பாயாசத்துடன் பிரமாதமான மரக்கறி உணவு.


தொழிற்சங்கத்தலைவர் திரு  ஏ கேசவன் தலைமை ஏற்க,
அப்போது வரை கல்யாணமே ஆகாமல் (ஆனால் காதலித்துக்கொண்டிருந்த)  திரு வி சுப்பிரமணியன் வரவேற்பு வழங்க 
வாழ்த்துரையாக
திரு மோகன்தாஸ் கோவில்பட்டி, 
திரு கருப்புராஜ் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம்
திரு எஸ் ஏ பெருமாள் த மு எ ச என்று வடிவமைக்கப்பட்டிருந்தது. 15/12/1986 அன்று காரைக்குடி ஹோட்டல் சுகம் இன்டர் நேஷனலில் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தேன். அதில் ஈரோடு ராஜு தலைமை தாங்கினார். மற்ற தொழிற்சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டார்கள். சி ஐ டி யு, மூட்டா, தீயணைக்கும்படை  நண்பர்கள், அரசு ஊழியர்கள், தொலைபேசி நிறுவனத்தின் அத்துனை சங்கங்கள் என பங்கேற்பு இருந்தது. சுவையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அது ஒரு கார்காலம் அல்லது கனாக்களின் காலம்.

10/12/2011 எனது கல்யாணத்தின் வெள்ளி விழா நாளில் விருது நகர் மாவட்ட கோ ஆபரேடிவ் வங்கியில் 5 பவுன் சங்கிலியுடன் அடமானத்திற்காக நிற்கிறேன்.  மனைவி மதுரை வடமலையான் ஆசுபத்திரியில் அவரது அம்மாவிற்கு முடியவில்லை என்று ஐ சி யு வில் இருக்கிறார். தியாகராசர் பொறியியற்கல்லூரியில் பயிலும் பாப்பாவும் அவரது அம்மாவோடு. லோன் கிடைக்க 12 மணிக்கும் மேலாக ஆகி விட்டது. கிடைத்த லோன் தொகை  அறுபதினாயிரம். ஏற்கனவே நண்பன் கிருஷ்ண குமாரிடம் வாங்கிய ரூபாய் 23,000/- த்தை க் கொடுத்து விட்டு பாக்கியை மதுரைக்குக் கொண்டு சென்று  கொடுக்க நான் போகவேண்டும். ஒரு காரில் போகலாமென்று யோசனை. பஸ்ஸில் ரயிலில் செல்லும்போது பணம் பறி போய் விட்டால் என்ன செய்வது என்ற காரணம்தான். ஒரு காரும் ஏற்பாடாகிவிட்டது நானும் நண்பர்கள் அழகு, சீனி, மருது மூவரும் மதுரைக்குப் பயணமானோம். 


வடமலையான் ஆசுபத்திரி சென்று ஐ சி யுவுக்கு முன்னால் வரமிருக்கும் எனது மனைவியிடம் மிச்சப்பணத்தைக் கொடுக்கிறேன் . காய்ச்சலில் படுத்திருந்த எனது மகள் விழித்துக்கொண்டு என்னப்பா காரிலா வந்தீர்கள் என்று கேட்கிறார். ஆம் என்றேன். இதோ வந்து விடுகிறேன் என்று போய் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பரிசுப்பொருளுடன் பெரிய வெட்டிங் அனிவெர்சரி கேக் கொண்டு வந்து என்னை வெட்டச்சொல்லுகிறார்.  ஆனந்தத்தாண்டவம் என்பது இதுதான் என நான் நினைத்துக்கொண்டேன்.


நண்பர்கள் முகத்தில் பலத்த மகிழ்ச்சி. எனது மனைவியைப்பார்த்தேன் இருபத்தைந்தாவது கல்யாண நாளுக்காக அவர் வாங்கியிருந்த பத்தாயிரம் ரூபாய்  ஆலுக்காஸின்  வைர மூக்குத்தியை விடவும் பூரிப்பு அவரத முகத்தில்.

Wednesday, November 30, 2011

மூன்று குட்டுகளும் மூன்று மறுத்தல்களும்

உச்ச நீதிமன்றத்தின் மூன்று குட்டுகளை தமிழக முதல்வர் வாங்கியபோதும் அசராமல் மூன்று கட்டண விகிதங்களை (பஸ், பால்  மற்றும் பவர்) உயர்த்தியிருக்கிறார்.

முதலாவதாக ஆட்சிப்பொறுப்பேற்ற கையோடு சமச்சீர் கல்வியை முடமாக்கத்துணிந்து செயல்பட்டார்  மூன்று மாதங்களாகக்குழந்தைகளைப்பாடப்புத்தகங்களினின்றும் தள்ளி வைத்தார் (ஆனாலும் 6 முதல் 14 வயது வரையிலான் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கல்வி அளிக்கப்பட சட்டமொன்று இயற்றப்பட்ட் நடைமுறையிலிருக்கிறது.) உயர் நீதி மன்றம் சமச்சீர் கல்வியை அமல் படுத்தச்சொல்லியும் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். அங்கு அவருக்கு ஆதரவான தீர்ப்பு வரவில்லை; சமச்சீர் கல்வி குழந்தை களுக்கு அரை மனதுடன் பாடப்புத்தகங்களில் வெட்டி ஒட்டி கொடுக்கப்பட்டது. முழுமையாகச்சென்றடைந்ததா பள்ளிகளுக்கும் குழந்தைகளுக்கும் என்பது ஆய்வுக்கு உட்பட்டது.

இரண்டாவதாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த( ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய 1991-1996 காலத்தில்) வழக்கில் 14 ஆண்டுகள் ஆனபிறகும் ஒரு முறை கூட ஆஜராகாமல் இருந்த வந்த நிலைமையைக்கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை பெங்களூரு நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது அக். 2011 இரு  நாட்கள் விமானத்தில் சென்று  1337 கேள்விகளில் பாதி வரை பதில் சொல்லிவிட்டு வந்தார்.

பாக்கி கேள்விகளுக்கு பதில் சொல்ல உரிமை கேட்டு உச்ச நீதிமன்றம் சென்றது வழக்கு. இம்முறையும் பெங்களூரு சென்று பதில் சொல்ல வேண்டும். வழக்காடு மன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனச்சொல்லி உச்ச நீதி மன்றம் ஆணையிட்டது. மீண்டும் இரண்டு நாட்கள் நவ 2011 இல் சென்று அனைத்துக்கேள்விகளுக்கும் பதில் சொன்னார். சென்னை வந்தார்.

மூன்றாவதாக 13000 சாலைப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப ஆணையிட்ட அம்மாவின் ஆணையை ரத்துசெய்து தமிழ் நாட்டில் என்னதான் நடக்கிறது? முந்தைய ஆட்சியில் எது செய்திருந்தாலும் மாற்றித்தான் ஆணையிட வேண்டுமா? பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை உடனே வேலைக்கு தமிழக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என மூன்றாவது முறையாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அம்மாவின் தலையில் மூன்றாவது முறையாகக்குட்டி உள்ளது.

(பின் குறிப்பு: பின் தொடரும் நிழலின் குரல் போல இவரது குரல் மனுதர்மத்தை அடிப்படையாகக்கொண்டது என்றால் வியப்பேதும் இல்லை.
1,70,000 அரசு ஊழியர்களை ஒரே உத்தரவில் வேலை நீக்கம் செய்தது; ஆடு கோழி கோவில்களில் வெட்டத்தடை விதித்தது; மதம் மாற்றத்தடைச்சட்டம் கொண்டுவந்து இந்துத்வா பரிசோதனைக்கூட குஜராத் மோடியையும் மிஞ்சியது; வேத பாடசாலைகள் கொண்டு வரவேண்டும் என்று முரளி மனோகர் ஜோஷியையும் மிரட்டியது எனத்தொடருகிறது அவரது கைங்கரியங்கள். இந்த ஆட்சியிலும் தொடருகிறது. ஒரு திராவிட இயக்கத்தலைமை மனுவாதியின் கையில் இருக்கிறதென்றே தோன்றுகிறது.)

அடுத்தவர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்( இந்நாள் பிரதமர்) உறுதியான கருத்துக்களை மூன்று முறை உரக்கக்கூறி அவரது வர்க்க சார்பு நிலையை நிலை நிறுத்தியிருக்கிறார்.


உணவுக்கிடங்குகளில் எலிகள் சாப்பிட்டுக்கிடக்கும்
வீணாகும் உணவுப்பொருட்களை வறுமைக்கோட்டுக்கீழே இருக்கும் மக்களுக்கு(அர்ஜுன் சென் குப்தா அறிக்கையின் படி நாட்டில் ஒரு  நாளைக்கு இருபது கூட சம்பாதிக்க முடியாமல் 80 கோடிப்பேர் இருக்கிறார்கள்) இலவசமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டபோது அரசின் கொள்கை முடிவுகளில் நீதி மன்றம் தலையிடக்கூடாது என்றார்.

பெட்ரோல் விலை நிர்ணயிப்பது அரசின் வேலை யில்லை அது எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களின் வேலை என்று கையைக்காட்டி விட்ட நிலையில், பெட்ரோல் விலை கடந்த 30 மாதங்களில் 13 முறை உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் இது பற்றி அறிக்கைகள் விட்ட நேரத்தில் சரியான நேரத்தில் கோபப்பட்டு இன்னும் எத்தனை நாளைக்குதான் அரசு மானியம் கொடுக்க முடியும் ? பணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்று கேட்டு சீறினார்.

கடைசியாக அந்நிய நேரடி முதலீடு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை மிகவும் முக்கியமானது. "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு, அவசர கதியில் எடுக்கப்பட்டதல்ல; ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகே எடுக்கப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"அன்னிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைவதால், நம் நாட்டில் உள்ள சிறிய தொழில்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தவறான கருத்து. சிறிய தொழில்கள் நலிவடையாமல் இருப்பதற்குத் தேவையான பல கட்டுப்பாடுகள் அன்னிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன"

"அறுக்குறப்பவும் பட்டினி
பொறுக்குறப்பவும் பட்டினி
பொங்கல் அன்னைக்கும் பட்டினி
பொழுதன்னைக்கும் பட்டினி"

என்ற ஒரு சொலவடை படித்தேன்.

அநேகமாக நமது நாட்டு மக்களின் நிலைமை இதுதான்.
(ஆனால் வறுமைக்கோட்டின் அளவு நகரென்றால் ஒரு நாளைக்கு வருமானம் ரூ 32/- கிராமப்புறமென்றால் ஒரு நாளைக்கு ரூ 26/- என்று நீட்டி முழங்குகிறார் அலுவாலியா என்று ஒருவர் இவருக்குத்துணை போனவர்).

"பேச்சுப்படிச்ச நாய்
வேட்டைக்கு ஆகாது"

"அங்காடிக்காரிய
சங்கீதம் பாடச்சொன்னா
வெங்காயம் கருவேப்பிலைன்னுதான் பாடுவா"

இந்த சொலவடைகள் அர்த்தம் பெறுவதாக நான் நினைக்கிறேன். நீங்கள்...